"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

2/16/2015

ஆதம்(அலை) தவறு செய்தபோது?

முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் தவறு செய்தபின்னர்,
என் இறைவா! நான் செய்த தவறை முஹம்மதின் பொருட்டால் நீ மன்னித்து விடு! என்று பிரார்த்தனைன செய்தனர். அதைக் கேட்ட அல்லாஹ் “ஆதமே! நான் இன்னும் முஹம்மதைப் படைக்கவே இல்லையே! அவரைப் பற்றி நீ எப்படி அறிந்து கொண்டாய்?” என்று அல்லாஹ் கேட்டான். அதற்கு ஆதம்(அலை) அவர்கள் “என்னை நீ படைத்த உடனே, என் தலையை உயாத்தி உனது அர்ஷைக் கண்டேன். அதில் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது. உன் பெயருடன் இணைத்து முஹம்மதின் பெயரையும் நீ எழுதியுள்ளதால், அவர் உனக்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்று நான முடிவு செய்து கொண்டேன்” என்று பதில் கூறினார்கள். உடனே அல்லாஹ் “முஹம்மதின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால் உன்னைநான் மன்னிக்கிறேன்” என்று கூறினான்.
அடிக்கடி நாம் கேள்விப்படுகின்ற, மார்க்க அறிஞர்களால், அடிக்கடி கூறப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியைத்தான் நாம் மேலே எழுதி இருக்கிறோம். கடந்த காலத்திலேயே இதை சில அறிஞர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ளனர். இமாம் ஹாகீம், இமாம் பைகஹீ, இமாம் துப்ரானி ஆகியோர் இதனை தங்களின் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்து உள்ளனர்.
இது சரிதானா? என்ற ஆராய்ச்சி கடந்த காலங்களிலேயே முற்கொள்ளப்பட்டு, “அது திட்டமிட்டு இட்டுக் கட்டப்பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி” என்று கடந்த காலத்தில் வாழ்ந்த ஹதீஸ் கலை வல்லுனர்கள் முடிவு செய்திருக்கின்றனர். அதனை நாம் விரிவாகப் பார்ப்போம்.
அறிவிப்பாளர்களின் தகுதி
ஹதீஸ் என்ற பெயரில் ஒன்றைச் சொல்லப்படுமானால், அதனை அறிவிக்க கூடியவரின் தகுதியை அடிப்படையாக வைத்தே, அதனை ஏற்பதா? ஏற்கக் கூடாதா? என்ற முடிவை ஹதீஸ் கலை வல்லுனர்கள் எடுக்கின்றனர்.
ஒரு ஹதீஸை அறிவிக்கக் கூடியவர், பொய் சொல்பவராகவோ, தீய செயல்கள் புரிபவராகவோ, அல்லது நினைவாற்றல் குறைந்தவராகவோ இருந்தால், அதனை ஹதீஸ் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஏற்பதில்லை. ஹதீஸ் கலையின் மாமேதைகளாம் இமாம் புகாரி, முஸ்லிம் ஆகியோரும், இமாம் மாலிக், இமாம் அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா போன்றோரும், ஏனைய ஹதீஸ் கலை வல்லுனர்களும், அறிவிப்பாளரின் தகுதியை வைத்தே ஒரு ஹதீஸை ஏற்கத் தக்கது என்றோ, ஏற்கத் தகாதவை என்றோ முடிவுக்கு வருகின்றனர். இது நபிமொழி ஆய்வாளர்கள் அனைவரும் ஒருமித்து ஏற்றுக் கொண்ட ஒரு அளவுகோலாகும்.
இந்த அளவுகோலை அடிப்படையாக வைத்து, இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தகுதி எத்தகையது என்பதை நாம் பாாப்போம்.
அப்துர் ரஹ்மான் இப்னுஜைது இப்னு அஸ்லம்
“முஸ்தக்ரக்” என்ற நூலில் இமாம் ஹாகிம் அவர்களும், “தலாயிலுன்னுபுவ்வத்” என்ற நூலில் இமாம் ைபஹகீ அவர்களும், “முக்ஸமுஸ்ஸகீர்” என்ற நூலில் இமாம் தப்ரானி அவர்களும் இதனை பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய மூவருமே, அப்துர் ரஹ்மான் இப்னு ஜைது இப்னு அஸ்லம்” என்பவர் மூலமாகவே அதனை அறிவிக்கின்றனர்.
இதனைத் தனது நூலில் பதிவு செய்துள்ள இமாம் பைகஹீ அவர்கள் ” இந்த ஹதீஸ் அப்துர் ரஹ்மான் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றது அவர் பலவீனமானவர், ஏற்கத்தக்கவர் அல்ல.” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஹதீஸை தனது நூலில் பதிவு செய்து விட்டு அதன் தரத்தையும் அவர்களே நமக்குச் சொல்லி விடுகிறார்கள் .
இந்த சம்பவத்தைப் பரிசீலனை செய்ய வந்த ஹதிஸ் கலையின் மாமேதைகள், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பேரறிஞர்கள், இமாம் அல்லமமா அல்ஹாபிழ் தஹபீ அவர்களும் அல்லாமா அல்ஹாபிழ் இப்னு ஹஜகுல் அஸ்கலானி அவர்களும், முறையே தங்களின் “மீஸானுல் இஃதால்” “அல்லிஸான்” என்ற நூல்களில் ” இந்த அப்துர்ரஹ்மான் ஏற்கத்தக்கவர் அல்ல. இந்த நிகழ்ச்சி இட்டுக்கட்டப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்கள். அறிஞர் இப்னு கஸீர் அவர்கள் தனது சரித்திர நூலில் அப்துர் ரஹ்மானைப் பற்றி, இப்படியே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அறிஞர் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் அப்துர் ரஹ்மானை ஹதீஸ்கலை வல்லுநர்கள் அனைவருமே ஏகோபித்து பலவீனமானவர்” என்று கூறியதாக குறிப்பிடுகின்றார்கள். அலி இப்னுல் மதீனீ இப்னா இஃது தஹாபீ போன்ற அறிஞர்கள் இந்த அப்துர் ரஹ்மான் மிக, மிக பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார்கள்.
“இவர் செய்திகளைத் தலைகீழாக மாற்றக்கூடியவர்” என்று இமாம் இப்னு ஹப்பான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இமாம், ஷைகுல் இஸ்லாம் அறிஞர் இப்னு தைமிய்யா அவர்களும் அப்துல் ரஹ்மானைப்பற்றி இதே கருத்தையே தெரிவிக்கின்றனர்.
நாம் நமது முறை வாழ்க்கையில், ஒரு மனிதன் சொல்வதை ஏற்பதென்றால், அந்த மனிதனை அவனது தகுதிகளை எடைபோட்டுப் பார்த்தே ஏற்றுக் கொள்கிறோம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக ஒன்றை அறிவிப்பவரின் தகுதி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை வாசகர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.
எவன் நான் சொல்லாததை நான் சொன்னதாகக் கூறுகின்றானே அவன் தனது தங்குமிடமாக நரகத்தைப் பெறுவான்” என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்குப்பின் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது தெரிகின்றது.
கேட்டதை எல்லாம் (ஆராயாமல் அப்படியே) அறிவிப்பது, ஒரு மனிதன் பொய்யன் என்பதற்கும் போதிய சான்றாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்
என்ற நபி மொழியும் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இதற்கு விளக்கமாக பின்வரும் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
அபூமூஸா(ரழி) அவர்கள் உமர்(ரழி) அவர்களின் அழைப்பை ஏற்று உமர்(ரழி) வீட்டிற்கு வந்து மூன்றுமுறை ஸலாம் கூறியும் பதில் வராததால், திரும்பிச் செல்ல எத்தணிக்கிறார்கள். பின்னர் உமர்(ரழி) அவர்கள் “ஏன் நீர் வரவில்லை?” என்று அபூமூஸா(ரழி) அவர்களிடம் கேட்க, அதற்கு அபுமூஸா(ரழி) அவர்கள் “உங்களில் ஒருவர் மூன்றுமுறை அனுமதிகேட்டும் பதில் வராவிட்டால் அவர் திரும்பி விடட்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அதனால்தான் திரும்பி விட்டேன் என்று பதில் கூறினார்கள். அதனைக் கேட்ட உமர்(ரழி) அவர்கள் (நான் நம்ப முடியாது) “இதற்காக ஆதாரத்தோடு நிரூபித்துக் கூறு” என்று கேட்கிறார்கள். “உடனே நான் அபூமூஸாவுக்கு சார்பாக அதனை உண்மைப்படுத்தினேன்” என்ற அபூசயீதுல் குத்ரி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
இந்த நிகழ்ச்சியிலிருந்து நபி(ஸல்) அவர்கள் பெயரால் ஒன்று கூறப்படும் போது, அவர்கள் அப்படிக் கூறினார்களா இல்லையா? என்று பரிசீலனை செய்வது அவசியம் என்பதை தெரியலாம்.
இந்த செய்தியை அறிவிப்பவராகிய அப்துர் ரஹ்மானைப் பற்றி எல்லா அறிஞர்களும் ஒருமித்து பொய்யரென்றும். இட்டுக்கட்டக் கூடியவர் என்றும், பலவீனமானவர் என்றும் கருத்துக் கூறி இருக்கும் போது அவர் வழியாக அறிவிக்கப்படுவதை எப்படி ஏற்க இயலும்? அதிலும் குறிப்பாக மாமேதைகள் தஹபீ, இப்னுஹஜர் ஆகிய இருவரும் இவரைப்பற்றி கூறி இருக்கும்போது, ஹதீஸ் கலையில் ஞானமுள்ள எவர்தான் இதனை ஏற்றுக் கொள்ள முடியும்?
பூமியில் இறங்கியய பின் :
ஆதம்(அலை) அவர்கள் பூமியில் இறங்கிய பின், ஜிப்ரில்(அலை) அவர்கள் பூமிக்கு வந்து பாங்கு சொல்கின்றனர். அதில் “அஷ்ஹது அன்ன முஹம்மதர்ரஸுலுல்லாஹ்” என்று கூறியபோது, “ஜிப்ரிலே! நீங்கள் முஹம்மத் என்று குறிப்பிட்டீர்களே, அவர் யார்? என்று கேட்டனர்” என்ற ஒரு ஹதீஸை, இப்னு அஸாகிர் அவர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.
இந்த ஹதீஸும் பலவீனமானதுதான், எனினும் மேற்கூறிய அந்த ஹதீஸை எல்லா அறிஞர்களும் பலவீனமானது என்று கூறியது போல், இந்த ஹதீஸை எல்லோரும் ஒட்டு மொத்தமாக பலவீனமானது என்று குறிப்பிடவில்லை, ஆகவே, இந்த ஹதீஸ் அந்த ஹதீஸை விட ஓரளவு தரமானது என்று கொள்ளலாம்.
இந்த ஹதீஸின் படி “பூமியில் ஆதம்(அலை) இறங்கியபின்பும், முஹம்மது(ஸல்) அவர்களை அறிந்திருக்கவில்லை. பாங்கோசை கேட்ட பின்பே ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள் என்பது தெரிய வருகின்றது. அந்த ஹதீஸின்படி படைக்கப்பட்ட உடனேயே, சுவர்க்கத்தில் வைத்தே ஆதம்(அலை) அவர்கள் முஹம்மது(ஸல்) அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறார்கள் என்று தெரிகின்றது. இங்கே இரண்டு கருத்துக்களும், ஒன்றோடொன்று நேரடியாகவே மோதிக் கொள்கின்றன.
இந்த இரண்டில் ஓரளவு சுமாராக உள்ள ஹதீஸின் கருத்துக்கேற்ப, ஏற்கத்தகாதவை என்று எல்லோரும் தள்ளிவிட்ட ஹதீஸின் கருத்து சரியானது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரலாம். அறிவுடையோர் இப்படித்தான் முடிவு எடுக்க இயலும்.
திருக்குர்ஆனின் தீர்ப்பு
அப்போது ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்றுக்(அறிந்துக்) கொண்டார். (அந்த சொற்கள் மூலம், மன்னிப்புக்கேட்டார்) அவரை அவன் மன்னித்தான். (அல்குர்ஆன் 2:37)

இந்தத் திருக்குர்ஆன் வசனத்தில் இறைவனிடமிருந்து ஆதம்(அலை) அவர்கள், சில சொற்களைக் கற்றுக் கொண்டதாக இறைவன் குறிப்பிடுகின்றான். ஆதம்(அலை) அவர்கள் இறைவனிடமிருந்து கற்றுக்கொண்ட அந்த சொற்கள் எவை என்பதை நாம் ஆராய வேண்டும். திருக்குர்ஆனில் ஒரு இடத்தில் கூறப்பட்ட வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமைந்திருக்கும் என்ற அடிப்படையில் “திருக்குர்ஆனை, நாம் புரட்டிக் கொண்டே வரும்போது, ஒரு இடத்தில் “அவ்விருவரும் (ஆதம் & ஹவ்வா) “எங்கள் இறைவா! நாங்கள் எங்களுக்கே தீங்கிழைத்துக் கொண்டோம், நீ எங்களை மன்னித்து அருளவில்லையாயின் நிச்சயமாக நாங்கள் நஷ்மடைந்தவர்களாவோம்” என்று கூறினார்கள் (அல்குர்ஆன் 7 : 23) என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அதாவது இறைவனிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்ட சொற்கள், இதுதூன், இதைத்தான் அவர்கள் கூறி மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள் என்று நாம் தெரிய முடிகின்றது. பெரும்பான்மையான திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் இதனையே சொல்கின்றனர்.
அல்குர்ஆன் 7:23ல் அல்லாஹ் குறிப்பிடும் சொற்களில் முஹம்மதின் பொருட்டால் என்று ஆதம்(அலை) கூறியதாக குறிப்பிடவில்லை. மாறாக தங்களின் தவறை உணர்ந்து, தங்களின் இயலாமையை எடுத்துக்காட்டி இறைவனின் வல்லமையை மறைசாற்றி அவனிடம் மன்னிப்புக் கேட்டதாகத்தான் அந்த வசனத்திலிருந்து விளங்க முடிகின்றது. இந்த அடிப்படையிலும் அந்த நிகழ்ச்சி சரியானதல்ல என்ற முடிவுக்கு வர முடியும்.
மேலும் அதே 2: 37 வசனத்தில் இறைவனிடமிருந்து சில சொற்களைக் கற்றுக் கொண்டு, அதனடிப்படையில் மன்னிப்புக் கேட்டதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இந்த ஆதாரமற்ற ஹதீஸில் ஆதம்(அலை) அவர்கள் தானாகவே அர்ஷை பார்த்து தானாகவே மன்னிப்புக் கேட்கும் முறையை அறிந்து கொண்டார்கள், என்றும் அதனால்தான் அல்லாஹ் மன்னித்தான் என்றும் கூறப்படுகிறது. திருக்குர்ஆனுடன் நேரடியாகவே மோதுகின்றது அல்லவா?

எனவே இந்த அடிப்படையில் நாம் ஆராய்ந்து பார்க்கையில் ஆதம்(அலை) அவர்கள் தமது மன்னிப்புக்காக (7:23) வனத்தில் உள்ள சொற்களையே பயன்படுத்தினார்கள் என்றும், இந்த கற்பனை நிகழ்ச்சியில் கூறப்பட்டது போல் அல்ல என்றும் தெரிந்து கொள்கிறோம்.
மேலும் சமுதாயத்தில் மக்கள் “நல்ல அமல்கள் செய்ய வேண்டும்” என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு எந்தப் பெரியோரையாவது பிடித்துக் கொண்டால் போதுமானது என்ற தவறான நம்பிக்கைக்கும் இந்தக் கதை வித்திட்டது. அல்லாஹ் இது போன்ற நம்பிக்கைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றி, நல் அமல்கள் மூலம் அவனது அன்பை – திருப்தியைப் பெற அருள்வானாக! ஆமீன்.

நன்றி பி ஜே



வீடியோ  வடிவில்  காண ...     http://www.myu-ba.com/multisearch/yt_v/キーワード/UuH8EZe1bdo.html